Thursday 4 January 2018

கந்துவட்டி தற்கொலைகளுக்கு யார் காரணம்?

2017 ஆம் ஆண்டு ஒருவழியாக பல பிரச்சினைகளைப் பார்த்துவிட்டது முடிந்துவிட்டது..சென்ற வருடம் பார்த்த பல்வேறு பிரச்சனைகளுள் ஒன்று கந்துவட்டி  தற்கொலை பிரச்சனை..வருடத்தின் இறுதி நாளில் கூட செய்தித்தாளில் ஒரு தற்கொலை செய்தி கந்துவட்டி பிரச்சனையால் கண்கலங்க வைத்தது..கந்துவட்டி என்ற பெயரில் வட்டிக்குவிடும் பெரியமனிதர்கள் போர்வையில் திரியும் ரௌடிகள் மட்டும்தான் இதற்குக் காரணமா? அவர்களை எல்லோரையும் ஒரே நாளில் இல்லாமல் போகச்செய்து விடமுடியுமா?  அரசாங்கம் நினைத்தால் ஒரே நாளில் ஒழித்துவிட முடியுமா? என்றால் முடியாது என்பதுதான் உடனடி பதில்...

ரஜினி சொல்வது போல இங்கே சிஸ்டமே கெட்டுப் போயிருக்கு..அவற்றை எல்லாம் ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை இல்லாமல் மாற்ற முடியாது...மாறவேண்டியது உண்மையில் பொதுமக்களாகிய நாமும்தான்...மக்களின் பேராசையால்தான் கந்துவட்டி தொழில் தெருவுக்கு தெரு கொடிகட்டி பறக்கிறது..

இருப்பதைக் கொண்டு யாரும் திருப்தி அடைவதில்லை..ஒரே நாளில் எல்லோருக்கும் அம்பானி ஆக வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது..அம்பானி கூட படிப்படியாகக் கஷ்டப்பட்டு முன்னேறியவர்தான் என்பதை மறந்துவிட்டு...

ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் கடன் வாங்க..சிலர் சொந்தவீடு கட்டவும்,சிலர் தொழில் தொடங்கவும்,சிலர் பெண்ணின் திருமணச்செலவுகளுக்கும், சிலர் அவசர மருத்துவச் செலவுக்கும், சிலர் ஏன் வாங்குகிறோம் என்றே தெரியாமல் வாங்குகின்றனர்..தங்கள் தகுதியை மீறி.. பாட்ஷா படத்தில் ரஜினி பேசும் கடன் வாங்கறதும் தப்பு. கடன் கொடுக்கறதும் தப்பு என்ற வசனம் கேட்பதற்கு ரொம்ப சாதாரணமாகத் தோன்றினாலும் ஆழமாக யோசித்தால் அதன் அர்த்தம் புரிகிறது...

சிலர் எந்த ஒரு பயிற்சியும் முன்னறிவும் இல்லாமலே இருக்கும் வீட்டை அடகுவைத்து தொழில் தொடங்குகின்றனர்...நஷ்டமானால் என்ன ஆகும் என்று எதிர்மறையாகவும் சிலநேரங்களில் சிந்திக்கவேண்டும்..

பலருக்கு வாடிக்கையாளர்களிடம் எப்படி பேச வேண்டும் என்ற பண்பாடு,தொழில் ரகசியம் கூட தெரிவதில்லை..கடனை வாங்கி கடை வைத்து என்ன பயன்..நானே சில கடைகளுக்குச் செல்லும்போது ஏன்டா இந்தக் கடைக்கு வந்தோம் என்று யோசித்திருக்கிறேன்... சிலர் சிடுமூஞ்சிகளாக இருப்பார்கள்..வாடிக்கையாளரின் மனதைக் கொஞ்சமாவது குளிரவைக்கும் ரகசியம் தெரியவேண்டும்...

அப்படியே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் கௌரவம் பார்க்காமல் இருப்பதைக் கொண்டு கடனை அடைத்துவிட்டு ஏழையாக வாழ்ந்தாலும் மானத்தோடு வாழ்வதில் தவறில்லை...தற்கொலை ஒன்று மட்டுமே தீர்வல்ல ...வாழ நினைத்தால் வாழலாம்...

ஆனால் பல பணக்காரர்களும் கடன்சுமை அதிகமானாலும் தங்கள் சொகுசு வாழ்க்கையிலிருந்து ஒருபடி கூட இறங்கிவர நினைப்பதில்லை..எது கௌரவம், எது வெட்டி கௌரவம் என்று அறிவதில்லை...

நான் நேரடியாகவே பலரைப் பார்த்திருக்கிறேன்..கடன்காரன் கழுத்தை நெரிக்கும்போது கூட தங்கள் உணவுப் பழக்கம், உடை, வெட்டி செலவுகள் எதையும் குறைத்துக்கொள்வதில்லை...கடன் தொல்லை இருக்கும்போது கூட பியூட்டி பார்லருக்கு பத்தாயிரம் செலவு செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன்...

இவர்களை யார் திருத்துவது...கடைசியில் கடன் அதிகமாகி விட்டது என்று தற்கொலை செய்வதால் யாருக்கு என்ன லாபம்? கந்துவட்டி காரர்களை கடவுள் பார்த்துக் கொள்வார்...அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை விட நாமும் மாறவேண்டும்...கந்துவட்டிக் காரர்களுக்கு நான் ஒன்றும் ஆதரவாகப் பேசவில்லை...இந்தக் காலத்தில் கடன் வாங்காமல் வாழ்வதென்பது கொஞ்சம் கஷ்டம்தான்...ஆனால் விரலுக்கேத்த வீக்கத்தோடு வாழப் பழகினால் பல உயி்ர்ப் பலிகளைத் தடுத்திடலாம்...நன்றி..


2 comments:

  1. விரலுக்கேத்த வீக்கம் - சரியான கருத்து. மற்றவர்கள் செய்வதை நாமு செய்ய வேண்டும் என் செய்பவர்கள் பலர். கடன் வாங்குவதற்கு முன் யோசித்து செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள்..நன்றி நண்பரே.

      Delete